பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது: அமைச்சர்
டெல்லி: கிரத் பாரிக் கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் வரை எரிபொருள் விலை உயர்த்தப்படாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
போக்குவரத்துக்கான எரிபொருட்கள் மீதான விலை நிர்ணயம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய கிரத் பாரிக் கமிட்டியை மத்திய அரசு அமைத்தது.
அக்கமிட்டி தனது அறிக்கையை இன்னும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. இதற்கிடையே அரசு பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றுக்கான விலையை உயர்த்தப் போவதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களை சந்தித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இதுபற்றி் கூறுகையில்,
'கிரத் பாரிக் கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் வரை எரிபொருள் விலை உயராது. இப்போதைக்கு விலையை உயர்த்தக்கூடாது என்று தான் நாங்களும் எதிர்பார்கிறோம்.
ஏற்கனவே விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் விலை உயர்வு மற்ற துறைகளையும் பாதிக்கக் கூடிய அபாயம் உள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை மானிய விலையில் எண்ணெய் விற்பதால் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இவற்றுக்கான இழப்பீடை வழங்கக்கோரி நாளைய தினம் நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜியை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
இந்த நிதியாண்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த இழப்பு சுமார் 43 ஆயிரம் கோடியாகும். ஆனால் நிதியமைச்சகம் இதுவரை 12 ஆயிரம் கோடி மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.
தற்போதைய சர்வதேச விலை நிலவரப்படி மூன்று அரசுத் துறை நிறுவனங்களும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.299ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.17.23ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.06ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.56ம் என்ற விதத்திலும் இழப்பை சந்திக்கின்றன' என்றார்.












Click it and Unblock the Notifications