தீவிரவாதி கசாப்பைப் பாராட்டிய ம.பி. ஐஜி இடமாற்றம்
போபால்: பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பை பாராட்டிப் பேசிய சிறப்பு ஆயுதப் படை ஐஜியை மத்தியப் பிரதேச அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சிறப்பு ஆயுதப் படை ஐஜியாக இருந்து வந்தவர் ராஜேந்திர குமார். இவர் போபாலில் நடந்த ஆயுதப் படையினருக்கான பயிற்சி முகாமின்போது நல்ல பயிற்சியும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக கசாப்பை மேற்கோள் காட்டிப் பேசினார்.
அவர் பேசுகையில், உங்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டால் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாதிக்க முடியும். உதாரணத்திற்கு கசாப்பை எடுத்துக் கொள்ளுங்கள். எட்டாவது வகுப்பு வரைதான் படித்துள்ளான் கசாப். மேலும் ஒரே ஒரு வருடம்தான் அவனுக்கு தீவிரவாத பயிற்சியை அளித்துள்ளனர்.
இதை வைத்துக் கொண்டு அதி நவீன ஆயுதங்களையும், சாதனங்களையும், ஜிபிஎஸ் கருவிகளையும் பயன்படுத்த அவன் கற்றுக் கொண்டுள்ளான்.
குறைந்த கல்வியறிவே இருந்தும் கூட இதையெல்லாம் அவனால் செய்ய முடிந்திருக்கிறது என்றால் அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது, அவனிடம் லட்சியம் இருந்துள்ளது என்றுதான் அர்த்தம் என்றார் ராஜேந்திர குமார்.
ஆயுதப் படைக் காவலர்கள் மத்தியில் ஐஜி இவ்வாறு கசாப்பை மேற்கோள் காட்டி பேசியது மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய மத்தியப் பிரதேச அரசு ராஜேந்திர குமாரை இடமாற்றம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications