பெட்ரோல் விலை: மமதா, சிபிஎம் எதிர்ப்பு-திமுக அமைதி!
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்து பாரீக் கமிட்டி கொடுத்துள்ள பரிந்துரைகளை மமதா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடுமையாக எதிர்த்துள்ளன. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினரான திமுக இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் பெருத்த அமைதி காத்து வருகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு நியமித்த கீர்த்தி பாரீக் கமிட்டி பெருமளவில் விலைகளை உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இதை மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த பரிந்துரைகளை அப்படியே நிராகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதியில் சிக்கித் தவித்து வரும் நிலையி்ல் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை பெருமளவில் உயர்த்தினால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள்.
உணவு பணவீக்கத்தின் அதிகரிப்பு காரணமாக மக்கள் விலைவாசி உயர்விலிருந்து மீள முடியாமல் மூழ்கித் தவித்து வருகின்ற நிலையில் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவது நியாயமாக இருக்காது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதை நான் ஏற்க மாட்டேன்.
பாரீக் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. மானிய விலை குறித்து கமிட்டி கூறியுள்ளது சரிதான். சாதாரண மக்களை மனதில் கொண்டு வளரும் நாடுகளின் அரசுகள் இதுபோன்ற மானிய
விலையை அமல்படுத்தி வருகின்றன என்றார்.
தற்போதைய நிலையில் காஸ் சிலிண்டரின் விலையை ரூ. 100ம், மண்ணெண்ணை விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்க கமிட்டி பரிந்துரைத்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலையையும் கணிசமாக உயர்த்த அது கூறியுள்ளது.
இந்தப் பரிந்துரைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொலிட்பீரோ உறஉப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், இந்தப் பரிந்துரைகளை உடனடியாக அரசு நிராகரிக்க வேண்டும்.
பாரீக் கமிட்டியின் பரிந்துரைகளை நாங்கள் முழமையாக நிராகரிக்கிறோம். மத்திய அரசு இதை ஏற்கக் கூடாது.
இதை அரசு ஏற்றால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
மத்திய அரசுக்கு சாமானிய மக்கள் மீது சிறிதளவாவது அக்கறை இருந்தால் இதை ஏற்காது. ஆனால் அரசோ விமான எரிபொருள் விலையை குறைக்கத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறதே தவிர சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் விலையைக் குறைக்க அது வேகம் காட்டுவதில்லை.
டீசல் விலையை உயர்த்தினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும், உணவு விலையிலும் அது பெரும் உயர்வை ஏற்றி விடும். எனவே அரசு பாரீக் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கவே கூடாது என்றார்.
பாரீக் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இந்த இரு முக்கியக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கூட்டாளிக் கட்சியான திமுக இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக பெருத்த அமைதி காத்து வருகிறது.
இதற்கிடையே, பாரீக் கமிட்டி பரி்ந்துரைகளை ஏற்பது குறித்து பட்ஜெட்டுக்கு முன்பு முடிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், இதுகுறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு முடிவு செய்யபப்டும் என்றார்.












Click it and Unblock the Notifications