பிரச்சனையில் பிரையஸ் கார் - பெரும் நெருக்கடியில் டொயோட்டா

சமீபத்தில்தான் டொயோட்டா நிறுவனம் கரோல்லா, கேம்ரி உள்ளிட்ட தனது 8 புகழ்பெற்ற மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மொத்தம் 23 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா.
இந்த அறிவிப்புக்கு முந்தைய நிறுவனத்தின் காலாண்டு லாபமாக 1.7 பில்லியன் நிகர லாபமாக நேற்று அறிவித்துள்ளது டொயோட்டா. ஆனால் இந்த லாபம் அடுத்த காலாண்டில் தொடருமா என்பது சந்தேகமே என்ற நிலை உருவாகியுள்ளது.
காரணம் டொயோட்டாவின் புதிய காரான பிரையஸ் மாடலிலும் பல குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்கள் உண்மைதான் என்றும், விரைவில் குறைகளைச் சரி செய்து விடுவதாகவும் டொயோட்டா அறிவித்துள்ளது.
கிரீன் கார் என்ற அடைமொழியுடன் வந்த இந்தக் காரின் ஆன்டிலாக் பிரேக் சிஸ்டம் நிறைய பிரச்சினைகளைத் தருவதாகவும், குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பிரையஸ் கார்களில் இந்தப் பிரச்சினையால் கார்கள் எரிந்து போகும் அளவு ஆபத்து நேர்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.
பரிசோதித்துப் பார்த்த டொயோட்டா நிறுவனம், இந்தப் புகாரில் உண்மை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பிரச்சினைக்குள்ளான பிரையஸ் மாடல்களை திரும்பப் பெற்று சரிசெய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறதாம் டொயோட்டா.
இந்த பிரச்சினை குறிப்பாக ஜப்பானில்தான் பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீக்கிரம் பிரையஸ் விஷயத்தில் ஒரு முடிவை எடுக்குமாறு ஜப்பான் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவசரப்படுத்தியுள்ளார்.
அனைத்து பிரையஸ் கார்களையும் திரும்பப் பெறுவதா அல்லது வேறு ஏதாவது முடிவெடுப்பதா என்று விரைவில் முடிவு செய்வோம் என டொயோட்டா துணைத் தலைவர் ஹிரோயுகி யோகோயமா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் யொடோட்டா நிறுவனத்துக்கு மிகப் பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இதுவரை டொயோட்டா வெளியிட்ட கார்களிலேயே, மிகச் சிறந்தது என ஆட்டோமொபைல் நிபுணர்களால் பாராட்டப்பட்டது பிரையஸ்தான். அதுமட்டுமல்ல, இந்தக் காருக்குதான் சர்வதேச அளவில் பெரும் ஆர்டர்கள் குவிந்தன.
இந்த நிலையில் பிரையஸ் பிரச்சினைக்குள்ளாகியிருப்பதால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தில் லாபம் எதிர்மறையாகும் வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் தன்னிகரற்ற நிறுவனமாகத் திகழ்ந்த டொயோட்டாவின் பெயரும் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்னவிதமான நடவடிக்கையில் இறங்குவது என்ற குழப்பத்தில் நிறுவனம் தவிப்பதால், பணியாளர்களும் மன நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனராம்!












Click it and Unblock the Notifications