பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு- தமிழர்களுக்கு ராஜபக்சே அழைப்பு
கொழும்பு: தமிழர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியம். அதற்கு தமிழர்கள் அனைவரும் என் பின் அணிவகுத்து நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
இலங்கையின் சுதந்திர தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த பின்னர் நடந்த முதல் சுதந்திர தினம் என்பதால் நேற்று தலைநகர் கொழும்பு விழாக்கோலம் பூண்டிருந்தது.
கண்டியில் நடந்த சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்து ராஜபக்சே உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்.
இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன்.
வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது.
இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம்.
இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம்.
இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்.
சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும்.
தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.
அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்.
தமிழர்கள் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அரசுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுடன் அவர்கள் இணைந்து விடக் கூடாது.
இன்னும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் புலம் பெயர்ந்த தமிழர்களின் சதி வலையில் சிக்கி விடக் கூடாது.
வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிச்சயம் நிற்க முடியும். கிராமங்கள் அனைத்துக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதன் மூலம் அவர்களும் நாட்டின் பிற பகுதி மக்களுக்கு இணையாக உயர முடியும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications