யாராவது கேட்டால்தான் ஆதரவு தருவோம், நாங்களாக தர மாட்டோம்- விஜய டி.ராஜேந்தர்
சென்னை: யாராவது எங்களது ஆதரவு வேண்டும் என்று கேட்டால்தான் தருவோம். நாங்களாக எங்களது சுய மரியாதையை விட்டுக் கொடுத்து ஆதரவு தருவதாக போய் நிற்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறியுள்ளார் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
லட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவர் விஜய டி.ராஜேந்தர் நேற்று தனது கட்சியின் புதிய கொடியை தனது வீட்டில் அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் லட்சிய திராவிட முன்னேற்றக்கழக கட்சியின் கொடியின் நிறம் கறுப்பு, நீலம், சிவப்பு என்ற மூவர்ண கொடியாக மாற்றம் செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் புதிய கொடியை ஏற்றி வைக்கிறேன்.
விலைவாசி உயர்வுக்காகவும், மறைமுக பேருந்து கட்டணம் உயர்வுக்காகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் போராட்டம் நடத்துவது என்று பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளோம்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டேன். ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட கருணாநிதி அழைத்ததால்தான் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தேன். அதே போல, தி.மு.க. கூட்டணி அழைத்தால் அப்போது பார்க்கலாம். நான் பரம்பரையாக தி.மு.க.காரன். கலைஞரை எதிர்த்து ஒரு தொகுதியில் நிற்கவேண்டும் என்று சொன்னபோது முடியாது என்று கூறினேன்.
ஜெயலலிதாவை குளிர்ச்சிப்படுத்துவதற்குத்தான் பென்னாகரம் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.
மின்னணு வாக்குப்பதிவை தவிர்க்கவேண்டும் என்று சொன்னவர், தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னவர் தேர்தல் கமிஷன் வைரவிழா நடக்கிறது என்று சொன்ன உடன் டெல்லிக்கு சென்று வந்துள்ளார். இதனால்தான் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திரைப்பட துறையினருக்கு பையனூரில் முதல்வர் கருணாநிதி இடம் ஒதுக்கியுள்ளதற்காக தமிழ் திரை உலகம் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளது. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications