காங். எம்.எல்.ஏவின் நிலம், பண்ணை வீடு கையகப்படுத்தப்பட்டது
சென்னை: சென்னை அருகே கொட்டிவாக்கம் பகுதியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனுக்குச் சொந்தமான 4.22 ஏக்கர் நிலமும், அதில் இருந்த பண்ணை வீட்டையும் வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியுள்ளது.
சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ராணி வெங்கடேசன். இவரது கணவர் வெங்கடேசன். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
இவர்களுக்கு சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமண பெருமாள் நகரில் 4 ஏக்கர் 33 சென்ட் நிலம் இருந்தது.
இந்த நிலத்தில், தோட்டத்துடன் கூடிய பிரமாண்ட சொகுசு பண்ணை வீடும் கட்டியிருந்தார் எம்.எல்.ஏ. கடந்த 1988-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நில எடுப்பு சட்டம் 1894-ன் படி, 11 சென்ட் நிலத்தை தவிர்த்து, 4 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை ஒப்படைக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து வெங்கடேசன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஓர் ஆண்டு காலத்திற்குள் 4 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்கும்படி கூறியது.
ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலத்தை வீட்டு வசதி வாரியத்திடம் ராணி வெங்கடேசன் ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து நேற்று அதிரடியாக வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் போலீஸாருடன் வந்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் வீட்டின் முன்பகுதி கேட், பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வீட்டு வசதி அதிகாரிகள் உத்தரவிட்டனர். நேற்று மாலை வரை வீட்டில் உள்ள பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் தமிழ்நாடு வீட்டு வசதி அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைக்கவுள்ளனர். தமிழ்நாடு இதுதவிர அந்த இடத்தில், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்படும்.
நேற்று மாலை ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு வந்தார். இடிக்கப்பட்ட பகுதியை பார்த்தபடியே வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார். வீட்டில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications