இன்றும் மக்கள் விரும்பும் கட்சியாக தேமுதிக மட்டுமே விளங்குகிறது- விஜயகாந்த்
சென்னை: இன்றும் மக்கள் விரும்பும் கட்சியாக தேமுதிக மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிப்ரவரி 12-ந் தேதி தே.மு.தி.க. கொடி நாளாகும். கட்சி தொடங்கப்பட்டு, இந்த சில ஆண்டுகளிலேயே கடுமையான சோதனைகளை நாம் சந்தித்து வருகிறோம். ஆண்டுகள் வர தவறினாலும், தேர்தல்கள் வரத்தவறுவதில்லை.
அடுத்தடுத்து நடைபெற்ற அடுக்கடுக்கான தேர்தல்களை கழகம் சந்தித்து புடம் போட்ட தங்கம் போல உருவாகி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று நாம் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக ஆகியுள்ளோம்.
சந்தர்ப்பவாதத்தையே கொள்கையாக கொண்டு கட்சி தாவும் சில அரசியல்வாதிகள் நமக்கு கொள்கையே இல்லையென்று கூக்குரலிடுகின்றனர். நாமோ அனைத்து மக்களும் நல்வாழ்வு பெறத்தக்க புதிய சமவாய்ப்பு சமுதாயம் காண அன்றாடம் பாடுபடுகிறோம்.
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இன்று அதர்மம் தலை விரித்தாடுகிறது. இந்த அராஜகத்தை எதிர்த்து தே.மு.தி.க. அரசியல் தர்மயுத்தத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் இதை நன்கு உணர்ந்த காரணத்தினாலேயே தொடர்ந்து நம்மை ஆதரித்து வருகின்றனர்.
அரசியல் விஷமிகள் சில பேர் திட்டமிட்டு வேண்டுமென்றே நமது இயக்கம் செல்வாக்கை இழந்து வருகிறது என்று அவதூறுகளை பரப்புகின்றனர். ஒரு இயக்கத்தின் செல்வாக்கு ஒரு சில தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களின் முடிவை பொருத்ததல்ல.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் மக்கள் தாங்களே விரும்பி கூடுவதும், வரவேற்பதும் தே.மு.தி.க.வை மட்டும் தான். கூலிக்கு ஆள் பிடிக்க வேண்டிய நிலைமை தே.மு.தி.க.விற்கு இல்லை.
தமிழ்நாட்டு அரசியலில் அனைத்து மக்களுக்கும் பொதுவான, அதே நேரத்தில் ஏழை மக்களை கைதூக்கி விடக்கூடிய அரசியல் இயக்கமாக வளர்ந்து வருவது தே.மு.தி.க. ஒன்று தான்.
இன்றைய இளைய முறை கண்டெடுத்த இந்த இயக்கத்தின் கொடி தான் ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகும்.
இந்த கொடி நிழலில் ஊழலையும், வறுமையும் ஒழிக்கவும் எல்லோருக்கும் சமச்சீர் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்க செய்யவும், நாம் ஒன்று கூடும் நாள் தான் கொடி நாளாகும். இந்த நாளில் இயன்றதை செய்வோம், இல்லாதவர்களுக்கே என்ற சூளுரையோடு கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications