மாணவர் விசா - விதிமுறைகளை கடுமையாக்கியது பிரிட்டன்
லண்டன்: மாணவர் விசா வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற பிரிட்டன் முடிவெடுத்துள்ளது.
பிரிட்டனில் வெளி நாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படும் மாணவர் விசாவை பலர் தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
இதன் விளைவாக கடந்த வாரம் திடீரென வட இந்தியாவில் உள்ள பல்வேறு மையங்களிலும் பிரிட்டனுக்கான மாணவர் விசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், மாணவர் விசா வழங்குவதில் பல புதிய கெடுபிடிகளை விதிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஆலன் ஜான்சன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'பிரிட்டனில் கல்வி கற்க விரும்பும் உண்மையான வெளிநாட்டு மாணவர்களை நாங்கள் அன்புடன் வரவேற்று வருறோம். இனிமேலும் வரவேற்போம்.
ஆனால், மாணவர் விசாக்களை பயன்படுத்தி வேலைக்காக பிரிட்டனுக்கு வருபவர்களின், சட்டவிதிமுறைகளை மீறிய, எங்கள் அமைப்பை குலைக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது.
எனவே புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம். இதன்படி, ஐரோப்பிய யூனியன் தவிர இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில புலமை உள்ளிட்ட தேர்வுகள் கடுமையாக்கப்படும்.
பட்டப் படிப்புக்கு கீழுள்ள படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 20 மணி நேரமாக இது உள்ளது.
ஆறு மாதத்துக்கும் குறைவான பயிற்சி காலத்தை கொண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் தங்களுடன் யாரையும் அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல், பட்டப் படிப்புக்குக் கீழுள்ளவற்றை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுடன் வருபவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பட்டப் படிப்புத் தரத்துக்கு கீழ் உள்ள படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள், தற்போது அரசால் திருத்தப்பட்டுள்ள நிறுவனப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதியும் பின்பற்றப்பட உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications