ஜம்மு காஷ்மீரில் பெண் தீவிரவாதி கைது
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 27 வயது பெண் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தீவிரவாத இயக்கங்களும் தங்களின் சதி திட்டங்களை அரங்கேற்ற பல்வேறு மாற்று வழிகளை சிந்தித்து வருகின்றன.
இந்த வகையில், போலீசாருக்கு துளியும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உளவு பார்க்கவும், முக்கிய பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் பெண்களை பயன்படுத்தும் யுத்தியை சமீபகாலமாக தீவிரவாதிகள் கையாண்டு வருகின்றனர்.
காஷ்மீரில் கடந்தாண்டு எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற அசியாமாலிக் என்ற பெண் ஐஎஸ்ஐ உளவாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் நாக்சேனி என்ற பகுதியில் போலீசார் கடந்த 4ம் தேதி சுற்றி வளைப்பு தாக்குதல் நடத்தினர்.
இதில் ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் பெரோஸ் அகமது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் மனைவி ஹபீசா பேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். 27 வயதான ஹபீசா பேகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரோஸ் அகமதுவை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இரண்டு குழந்தைகள் பெற்ற ஹபீசா பேகமும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, போலீசாருக்கு தெரியாமல் கொண்டு போய் சேர்ப்பது, ராணுவ நடமாட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேவு பார்த்து தீவிரவாதிகளுக்கு தெரிவிப்பது போன்ற வேலைகளில் நபீசா ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதங்களை இயக்கவும் ஹபீதா பேகம் பயிற்சி எடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். தேச வீரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் ஹபீசாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு மிகவும் அப்பாவித்தனமாக தோற்றமளிக்கும் ஹபிசாவை தீவிரவாதி என நம்புவதற்கு நீண்ட நேரம் பிடித்தது என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications