சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மர்மக் கடிதம் கோவையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நெல்லையில் பள்ளிகளுக்கும் குண்டு மிரட்டல்:
இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஐடிஐ மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அப்பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் அரசினர் தொழிற்பயிற்சி மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று ஒரு மர்ம கடிதம் வந்தது.
தமிழர் விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரில் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் தென்மாவட்டங்களில் உள்ள ஐடிஐ, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வரும் 20ம் தேதி குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அந்த கடிதத்தின் நகல் உடனடியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள ஐடிஐ, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அவினாஷ்குமார், மேற்பார்வையில் உதவி கமிஷனர் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் வீரபாண்டி ஆகியோர் தலைமையில் பேட்டையில் உள்ள அரசு ஐடிஐ,யில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே போல் முனைஞ்சிப்பட்டியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார், எதற்காக மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications