நில மோசடி விவகாரத்தில் வடிவேலுவை மிரட்டினாரா திண்டுக்கல் பாண்டியன்?

ரூ. 7 கோடி அளவில் தன்னிடம் மோசடியான ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று பெரும் மோசடி செய்து விட்டார் சிங்கமுத்து என்று நடிகர் வடிவேலு புகார் கூறியுள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தில் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியனின் பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது.
சில காலத்திற்கு முன்பு வடிவேலுவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டலை விடுத்தவர் பாண்டியனாகத்தான் இருக்கும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
மேலும், பாண்டியனுடன் சேர்த்துக் கொல்லப்பட்டவரான கூடுவாஞ்சேரி வேலு ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். எனவே பாண்டியனுடன் சேர்ந்து வடிவேலுவுக்கு மோசடியான நிலத்தை விற்க வேலு உதவியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மோசடியான ஆவணங்களை வேலுதான் தயாரித்துக் கொடுத்திருக்க வேண்டும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனராம்.
இதுதவிர அசோக் நகரி்ல் டாமின் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் சரவணன், அவரது மனைவி, வேலைக்காரப் பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் பாண்டியனுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த வழக்கை நான்கு வாரத்திற்குள் துப்பு துலக்க வேண்டும். இல்லாவிட்டால் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நேற்று முன்தினம்தான் சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ் கமிஷனருக்கு கெடு விதித்தது என்பது நினைவிருக்கலாம்.
மேலும், பாண்டியன் கிட்டத்தட்ட 20 கொலைகள் வரை பண்ணியிருக்கலாம் என்ற முடிவுக்கும் போலீஸார் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஐந்து கொலைகளி்ல் மட்டுமே பாண்டியனுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் ஆவணங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications