நகை ஜொலிக்க வைப்பதாகக் கூறி மோசடி: பீகார் இளைஞர்களுக்கு 6 மாத சிறை
சங்கரன்கோவில்: தங்க சங்கிலியை புதுப்பித்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள் 2 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பீகார் மாநிலம் ராட்டா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், அனில்குமார் ஆகிய இருவரும் சங்கரன்கோயில் அருகே உள்ள சூரங்குடி கிராமத்திற்கு வந்தனர்.
தங்க நகைகளை கொடுத்தால் பாலிஷ் போட்டு புதுப்பித்துத் தருவதாக கிராம மக்களிடம் கூறினர். குமார் என்பவர் 32 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி ஒன்றை புதுப்பித்து தர கொடுத்தார்.
நகையை ஒரு திரவத்தால் அலசி புதுப்பித்து விட்டதாக கூறி சந்தோஷ்குமாரும், அனில்குமாரும் கூறினர். இதில் சந்தேகம் அடைந்த குமார் தங்க சங்கிலியை எடை போட்டு பார்த்தபோது 32 கிராமுக்கு பதிலாக 24 கிராம் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.
இதனால் 8 கிராம் தங்கத்தை மோசடி செய்து வி்ட்டதாக குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீகார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சந்தோஷ்குமார், அனில்குமார் ஆகிய இருவருக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பாலமுருகன் தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications