பெட்ரோல்-டீசல் விலை: கேபினட் முடிவெடுக்கவில்லை
டெல்லி: பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்த்துவது குறித்து இன்று மத்திய அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கிரித் பாரிக் கமிட்டி தனது அறிக்கையை கடந்த வாரம் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.3 முதல் 4 வரையிலும், மண்எண்ணை லிட்டருக்கு ரூ.6ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100ம் உயர்த்த கமிட்டி தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.
இந்த பரிந்துரையை அப்படியே ஏற்காவிட்டாலும், ஓரளவு சுமையை குறைக்கும் வகையில் விலை உயர்வை கட்டாயம் மத்திய அரசு அமல்படுத்தும் என்று செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து இன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் இன்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம்,
'பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து எந்தவித ஆலோசனையும் இன்றைய கூட்டத்தில் இடம்பெறவில்லை' என்றார்.
நேற்றிரவு டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்படவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications