ஆர்டர்கள் குறைவு - வாட்டத்தில் ஓசூர் ரோஜா ஏற்றுமதியாளர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- தேன்கனிக்கோட்டை பகுதிகள் ரோஜாப் பூக்களுக்கு பிரபலமானவை. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட அரசு உதவியுடன் நடத்தப்படக் கூடிய ரோஜாப் பூ பண்ணைகள் உள்ளன. இதுதவிர 55 தனியார் ரோஜாப் பூ பண்ணைகளும் உள்ளன.
இந்தியாவின் ஒட்டுமொத்த ரோஜா ஏற்றுமதியில் இந்தப் பகுதியின் பங்கு மட்டும் 80 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 42,000 ஏக்கர் பரப்பளவில் ஓசூர் பகுதியில் ரோஜாப் பூ வளர்க்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து தான் ரோஜாப் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக காதலர் தினத்தையொட்டி இங்கு ரோஜா ஏற்றுமதி படு விறுவிறுப்பாக இருக்கும்.
ஆனால் இந்த முறை அதில் பெரும் தொய்வு காணப்படுகிறது. ஐரோப்பாவில் காணப்படும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாகவும், சீனாவில் சீனப் புத்தாண்டு வருவதாலும், ரோஜாப் பூ ஏற்றுமதியில் பெரும் சரிவு காணப்படுகிறதாம்.
ஓசூர் ரோஜாப் பூக்கள் கிட்டத்தட் 60 முதல் 70 சதவீதம் வரை ஐரோப்பா மற்றும் சீனாவுக்கே செல்கின்றன. ஆனால் காதலர் தினத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஏற்றுமதிக்கான ஆர்டரே கிடைக்காமல் ஓசூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் வாட்டத்தில் உள்ளனர்.
ஐரோப்பாவிலிருந்து சுத்தமாக ஒரு ஆர்டர் கூட வரவில்லையாம். இதுவே கடந்த ஆண்டு 10.2 லட்சம் ரோஜாப் பூக்களுக்கான ஆர்டர் ஐரோப்பாவிலிருந்து ஓசூருக்குக் கிடைத்ததாம்.
ஐரோப்பாவில் நிலவும் கடும் பனியே இதற்குக் காரணம் என்கிறார்கள் ஓசூர் ரோஜா ஏற்றுமதியாளர்கள். மேலும், இந்த ஆண்டு காதலர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதும் ரோஜாப் பூக்களுக்கான ஆர்டர் வராததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறறது.
இதுகுறித்து உலகின் முன்னணி ரோஜா பண்ணைகளில் ஒன்றான டான்புளோரா இன்பிராஸ்டிரக்சர் பார்க நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு நாங்கள் மட்டும் லட்சக்கணக்கான ரோஜாக்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தோம்.
சீனால் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று, சீனப் புத்தாண்டும் வருகிறது. சீனர்கள் புத்தாண்டை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதையே விரும்புவார்கள். அன்றைய தினம் காதலர்களுடன் கொண்டாடுவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.
கடந்த 100 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக காதலர் தினத்தன்று சீனப் புத்தாண்டு பிறக்கிறது. அடுத்து 2048ம் ஆண்டுதான் காதலர் தினமும், சீனப் புத்தாண்டும் சேர்ந்து வருகிறது.
இதன் காரணமாகவும் ரோஜாவுக்கான ஆர்டர் இதுவரை வராமல் உள்ளது என்றனர்.
காதலர் தினத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பே சீனாவிலிருந்து ரோஜாக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவிந்து விடுமாம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லை என்கிறார் கிருஷ்ணசாமி என்கிற ஏற்றுமதியாளர்.
சீனா, ஐரோப்பா தவிர ஜப்பான், ஆஸ்திரேலியாவுக்கும் ஓசூர் ரோஜாக்கள்தான் போகின்றனவாம்.
உலகக் காதலர்கள் கையில் ரோஜாவும், வாயில் 'தாஜா'வுமாக காத்திருக்கையில், ஓசூர் ரோஜா ஏற்றுமதியாளர்கள் வாடிய முகத்துடன் காணப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications