முல்லைப் பெரியாறு வழக்கு- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இன்று நடந்த விசாரணைக்குப் பின்னர் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைத் தலைவராகப் போட வேண்டும். குழுவில் மத்திய அரசின் சார்பில் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். தமிழக, கேரள அரசுகளின் சார்பில் தலா ஒருவர் இடம் பெற வேண்டும்.
தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சார்பில் நியமிக்கப்படும் ஒரு உறுப்பினர் ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுனராகவோ இருக்கலாம்.
அதேசமயம், மத்திய அரசு சார்பில் நியமிக்கப்படும் இரு உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்படாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஐந்து பேர் கொண்ட குழு குறித்த முறையான உத்தரவுகள் நாளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவசர அவசரமாக இதை ஒன்றுமில்லாமல் போகச் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்தது கேரள அரசு.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பி வைத்தது.
அரசியல் சாசன பெஞ்ச் நடத்தி வரும் விசாரணையின் முக்கிய கட்டமாக, தற்போது ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வழக்கு குறித்து முழுமையாக ஆராய்ந்து இந்தக் குழு உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆறு மாதத்திற்குள் தங்களது அறிக்கையை குழு அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு சார்பில் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், முல்லை பெரியாறு அணை வழக்கை மத்திய நடுவர் மன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அதற்கு நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உணர்வுபூர்வமானது. இந்த வழக்கை நடுவர் மன்ற விசாரணைக்கு மாற்றினால் சில அரசியல் பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற நதிநீர் பிரச்சினை தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய சால்வே, சிறுவாணி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது போல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். புதிய அணையின் உரிமம் மற்றும் நிர்வாக உரிமை கேரள அரசிடம் இருக்க வேண்டும். பராமரிப்பு செலவை தமிழகம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications