தேசிய உயர்கல்வி ஆணையம்: தமிழக உயர்கல்வி அமைச்சர் எதிர்ப்பு
சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ), பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றை ஒன்றிணைத்து தேசிய உயர்கல்வி ஆணையம் (என்சிஎச்இஆர்) என்ற தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு முன்வடிவை மத்திய அரசு தயாரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் உள்பட 7 பேர் கொண்ட ஆய்வுக் குழுவினர் மூலம் அனைத்து மாநிலத்தில் உள்ள கல்வியாளர்களிடமும் மத்திய அரசு கருத்துகளை சேகரித்து வருகிறது.
இந்தக் குழுவினர் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோரின் கருத்துகளை இன்று கேட்கின்றனர். இதற்கான கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், 'தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் உயர் கல்வி தொடர்பாக மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அது குறைப்பதாக இருக்கும் என கல்வித் துறை கருதுகிறது.
தேசிய உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது தொடர்பாக, மாநில அமைச்சர்களை அழைத்து மத்திய அரசு பேசும் என்று எதிர்பார்க்கிறோம்.
உயர்கல்வி தொழில்நுட்ப கவுன்சில் மத்திய அரசின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது. அதற்கு அதிக அதிகாரம் வழங்குவதன் மூலம் கல்வித் தரத்தை அதிகரிக்க முடியும்.
மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவற்றை தங்கள் கையில் எடுக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையானது நீதிமன்றம் வரை சென்று அரும்பாடுபட்டு நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் இரு மொழித் திட்டமும், சில மாநிலங்களில் மும்மொழித் திட்டமும் நடைமுறையில் உள்ளன. இதுபோன்ற நிலையில், உயர்கல்வி ஆணையம் என்பது நடைமுறைக்கு ஒத்துவராததாக உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications