'சிறுதாவூர் சீமாட்டியும்' மார்க்சிஸ்டுகளும்: பொன்முடி தாக்கு!

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: குடிமனைப் பட்டா கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு புதிய மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி ஏடுகளில் வந்ததைத் தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஏப்ரல் 19ம் தேதியன்று புதிய தலைமைச் செயலகம் முன்பாக குடிசை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.

அதுபற்றி முதல்வர் கருணாநிதி தனது 'முரசொலி கடிதத்தில்' திமுக ஆட்சிக் காலத்தில் குடிமனைப் பட்டாக்கள் எந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவிற்கு குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், புள்ளி விவரங்களோடு பதில் அளித்திருந்தார்.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவதாக கருதிக்கொண்டு அந்தக் கட்சியின் சார்பில் ''பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதா?'' என்ற தலைப்பிலே ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது.

கருணாநிதி பட்டுக்கோட்டைக்குத்தான் வழி சொல்லியிருக்கிறார். அது கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதைப் போல மார்க்சிஸ்டுகளுக்கு தெரிய காரணம்- அவர்கள் அரசியல்ரீதியாக வலிந்து போய் தாங்களே மேடை போட்டு, அழையாதார் வீட்டு விருந்தாளியைப் போல- 'சிறுதாவூர் சீமாட்டியின்' தயவிற்காக காத்திருக்கும் நிலையில், அப்படித்தான் தெரியும்.

குடிமனைப் பட்டா கோரி போராட்டம் நடத்தத் துடிக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை கேட்பது எல்லாம், திமுக ஆட்சியை விட வேறு எந்த ஆட்சியிலாவது இந்த அளவிற்கு குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா?.

எதற்காகவாவது இந்த ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குறிக்கோளா?.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறக்கப்படுகின்ற நேரத்தில், எல்லா இடங்களையும் விட்டுவிட்டு, அந்த அலுவலகத்திற்கு முன்னால் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது முறைதானா?

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வறுமை காரணமாக ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தஞ்சை மாவட்டத்திலே தற்கொலை செய்து கொண்டபோது, நள்ளிரவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் இல்லத்திற்கே காவல்துறையை அனுப்பி மிரட்டினார்களே, அது போன்ற ஆட்சிதான் 'புனித ஆட்சியாக' மார்க்சிஸ்டுகளுக்கு தோன்றுமா?.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஒரு முறை பேசும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் மார்க்சிஸ்ட் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், ''இதனால்தான் அவர்கள் மக்களுக்குப் பயன் இல்லாமல் போய் விட்டனர். எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம், போராட்டம் என்று தான் இருப்பார்கள். அல்லது 'பொலிட்பீரோ' கூட்டம் கூட்டி மூன்று, நான்கு நாட்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்'' என்றெல்லாம் குறிப்பிட்டார். அதை எதிர்த்து பட்டினிப் போராட்டம் நடத்த மார்க்சிஸ்டுகளுக்கு துணிவில்லை.

மேலும் ஜெயலலிதா கம்யூனிஸ்டு கட்சியைப்பற்றி விமர்சிக்கும் போது, ''கம்யூனிஸ்டுகள் வெத்து வேட்டு போராட்டம் நடத்துவார்கள். அவர்கள் பேராசைக்காரர்கள். குழாய்ச்சண்டைக் கோமாளிகள் என்றும் உண்டியல் (தகரம்) கண்டுபிடிக்கப்பட்டதே அவர்களுக்காகத்தான்'' என்றும் சொன்னாரே, அப்படிச்சொல்வதுதான் பட்டுக்கோட்டைக்குச் செல்லும் உகந்த வழியாக மார்க்சிஸ்டுகளுக்கு தோன்றுமா?.

கீழத்தஞ்சையில் குடியிருப்போருக்கு இலவச மனைப்பட்டா வழங்கியது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம், தியாகத்தால் தான் என்று ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். போராட்டம் நடத்தி விட்டால், தியாகம் செய்து விட்டால் மட்டும் சட்டம் வந்து விடுமா?.

அதை மதிக்கின்ற அரசாக திமுக அரசும், கலைஞர் இருந்ததால் தானே அந்தச் சட்டம் வந்தது.

இந்த உண்மை ராமகிருஷ்ணனுக்கு புரியாமல் போய் விட்டதா? வாதத்திற்குப் பதில் சொல்லலாம், விதண்டா வாதம் செய்தால் என்ன செய்வது, கொட்டைப்பாக்கையே நினைத்துக் கொண்டிருந்தால் பட்டுக்கோட்டைக்கு வழி தெரியாது! இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் புரிந்து கொண்டால் நல்லது.

இவ்வாறு கூறியுள்ளார் பொன்முடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+