ஆலப்புழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் மிதக்கும் சூப்பர் மார்க்கெட்!

ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள ரம்மியமான இயற்கை சூழலுடன் கூடிய நீர் நிலையில் இந்த மிதக்கும் ஷாப்பிங் மால் அமைக்கப்பட்டுள்ளது.
திரிவேணி சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் மிதக்கும் இந்த ஆல் இன் ஆல் கடையில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களோடு பலசரக்கு, சீப்பு, ஷாம்பூ முதல் ஊட்டச் சத்து குளிர் பானங்கள் வரை அனைத்தும் கிடைக்கிறது.
பிரமாண்ட படகில் அமைக்கப்பட்ட மிதக்கும் பல சரக்குக் கடையான இது, ஆலப்புழாவில் உள்ள 12 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த, நீரால் சூழப்பட்டுள்ள 53 கிராமங்களுக்கு சென்று வருகிறது.
கிராம மக்கள் படகு தங்கள் பகுதிக்கு வரும் போது இதில் ஏறி தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம்.
பெரு நகர ஷாப்பிங் மால்களில் கிடைக்கக்கூடிய தரமான பொருட்களும், பிரபலமான பிராண்டுகளும் இந்த மிதக்கும் சூப்பர் மார்க்கெட்டில் உண்டு.
மாநில கூட்டுறவு அமைச்சர் ஜி.சுதாகரனின் செல்லத் திட்டமாக கூறப்படும் இந்த மிதக்கும் ஷாப்பிங் மாலில் பொருட்கள் மானிய விலையில் விற்கப்படுவது முக்கிய அம்சமாகும்.
அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவை சந்தை விலையை விட சுமார் 10 முதல் 15 சதவீதம் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இந்த மிதக்கும் சூப்பர்மார்க்கெட் மூலம், கிராம மக்கள் பஸ் பிடித்து நகரங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கும் சிரமம் குறைகிறது.
அதோடு தரமான பொருட்கள், குறைந்த விலையில் கிடைப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, வாரச் சந்தைக்கு காத்திருப்பது போல, இந்த படகு எங்கள் கிராமத்துக்கு எப்போது வரும் என காத்திருப்போம் என்று மக்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு வந்து தருவோம் என அரசியல் கட்சிகள் அறிவித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், கேரளாவில் நீர் நிலைகளுக்கு மத்தியில் உள்ள கிராமங்களுக்கு இப்படியொரு புதுமையான திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதமே அரசு செயல்படுத்திக் காட்டியது.
தற்போது இந்த மிதக்கும் ஷாப்பிங் மால்கள் கிராம மக்களுக்கு பயன் படுவது ஒருபுறம் இருந்தாலும், சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய காட்சிப் பொருளாக மாறியுள்ளது.
இந்த படகில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமமாக செல்லும் இந்த படகின் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இந்த மிதக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினசரி ரூ.60 ஆயிரம் வரை விற்பனை ஆவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை சற்று கூடுதலாக இருக்குமாம்.
இந்த படகை கொச்சின் பல்கலைக் கழகத்தின் கடல்சார் அறிவியல் துறையினர் ரூ.50 லட்சம் செலவில் வடிவமைத்துள்ளனர். எடையை குறைக்க, பில்லிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சோலார் எரிசக்தி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications