ரயில்வேவுக்கு எதற்கு தனி பட்ஜெட்?
டெல்லி: இந்திய ரயில்வேயின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல், பணியாளர்கள் சம்பளம் மற்றும் சலுகைகளுக்காக செலவிடப்படுகிறது.
ரயில்வேக்கு முக்கிய வருமான வழியாக சரக்கு போக்குவரத்து திகழ்கிறது. சரக்கு போக்குவரத்தை கையாள்வதன் மூலமாகவே ரயில்வே துறை பெரும்பான்மை வருவாயை ஈட்டுகிறது.
இவ்வாறு கிடைக்கும் வருவாயில், செலவினங்கள் குறித்து கணக்கிட்டால், ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அதில், 34 பைசா பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் மற்றும் சலுகைகளுக்காக செலவாகிறது. 13 பைசா பென்ஷன் நிதிக்கு செலவாகிறது.
ரயில்களுக்கு பயன்படும் எரிபொருள் செலவினம் மொத்த வருவாயில் 17 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ரயில்வேத் துறை பயணிகளிடம் இருந்து வசூலித்த கட்டணத் தொகை, மொத்த வருமானத்தில் 27 சதவீதமாகவே இருக்கிறது. ஆனால் சரக்கு போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய் மொத்த வருமானத்தில் 66 சதவீதமாகும்.
2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.62 ஆயிரத்து 489ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ. 58 ஆயிரத்து 715.44 கோடி.
நவீனமயமாக்கலுக்கு ரூ.41,426 கோடி:
ரயில் போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.41,426 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையில், ரூ.4, 411 கோடி, ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு செலவிடப்பட உள்ளது. மேலும் ஆயிரத்து ரூ. 302 கோடி பயணிகளின் வசதிகளுக்காக செலவிடப்படும்.
2010-11ம் ஆண்டில் ஏற்றப்படும் சரக்கு இலக்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் 54 மில்லியன் டன் அதிகரிக்கப்பட்டு, 944 மில்லியன் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.2,848 கோடி, தற்போது ரூ.4,411 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2010-11ம் ஆண்டுக்கான மொத்த செலவினங்கள் ரூ.87,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2009-10ம் ஆண்டின் மொத்த வருவாய் ரூ.88,281 கோடி. இதில் ரயில்வே துறைக்கு கிடைத்த நிகர லாபம் ரூ.1,328 கோடி என்றும் ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எதற்கு தனி பட்ஜெட்?:
இந்திய ரயில்வேத் துறை உலகிலேயே இரண்டாவது பெரிய நெட்வொர்க் எனக் கருதப்படுகிறது. தற்போது இந்திய ரயில்வேயில் மொத்தம் 64,099 கி.மீ தொலைவிலான ரயில் பாதைகள் உள்ளன.
நாடு முழுவதும் தினமும் சுமார் 7,000 ரயில்களின் மூலம் 6,906 ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 1.89 கோடி பயணிகளுக்கு சேவை அளித்து வருகிறது இந்திய ரயில்வே. அதோடு, தினசரி பல கோடி டன்கள் கொண்ட 4,000க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களையும் இயக்குகிறது இந்திய ரயில்வே.
எனினும், உணவு, தண்ணீர், மின்சாரம், சாலைகள், பெட்ரோல் போன்ற அத்தியாவசியத் தேவையான பொருட்களை விடவும் இந்த ரயில்வே துறைக்கு மட்டும் ஏன் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விமர்சனங்கள் எழுகின்றன.
ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்ட போது, அந்த சமயத்தில் இந்தியாவின் அத்தனை பகுதிகளையும் ரயில் பாதையால் இணைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ரயில்வே துறைக்கு சிறப்பு கவனம் அளித்தனர்.
இதன் காரணமாகவே ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் மற்றும் திட்டங்கள் என சிறப்பு கவனத்துக்கான நடவடிக்கைகளை செய்தனர்.
சுதந்திரத்துக்கு பின்னும், இந்திய தொடர்ந்து தனது பழக்கத்தை கைவிடாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
உலகின் பிற நாடுகளில் இதுபோன்று ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் போட்டு செயல்படுவதை காண்பது அரிது. தனி பட்ஜெட் இல்லாமலேயே பல நாடுகளில் நம்மை விட அதிநவீன ரயில் போக்குவரத்து சேவைகள் உள்ளன.
ரயில் கட்டண உயர்வையோ புதிய சேவைகளையோ நாடாளுமன்றத்தில் தான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. பெட்ரோல் விலையைப் போலவும், சர்க்கரை விலையை போலவும் சாதாரணமாகக் கூட அறிவிக்கலாமே என்ற கேள்வி எழுகிறது.
இதனால் நாட்டில் வறுமையையும் பட்டினியையும் போக்க உணவுக்கென்று தனி பட்ஜெட் அல்லது விவசாயத் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தயார் செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுகிறது.












Click it and Unblock the Notifications