நள்ளிரவில் நடந்த போலீஸ் விசாரணையின்போது சாருலதாவுக்கு மயக்கம்
சென்னை: போலீஸ் அதிகாரியாக நடித்து சிக்கியுள்ள இளம் பெண் சாருலதாவிடம் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அவர் மயக்கமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாருலதா, போலீஸ் அதிகாரி போல வேடமிட்டு நடித்து போலீஸாரையும், பல இளைஞர்களையும் ஏமாற்றி கைதானார்.
பல லட்சம் அளவுக்கு பண மோசடியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்துள்ளது காவல்துறை.
இன்று மாலை 3 மணியுடன் சாருலதாவின் போலீஸ் காவல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சாருலதாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாருலதாவிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சாருலதாவிடம் பெண் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சாருலதா மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு சளிப் பிரச்சினை இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
2 நாள் விசாரணையின்போது தனது மோசடிகள் குறித்து சாருலதா பல்வேறு தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. தான் மோசடி செய்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் அவர் கொடுத்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் போலீஸ் சீருடையை தயாரிப்பது உள்ளிட்டவை குறித்த உதவிகளை 3 பெண் போலீஸார் கொடுத்து உதவியதாகவும் சாருலதா கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications