புனேவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களை வேவு பார்த்தார் ஹெட்லி- எப்.பி.ஐ.

கடக்ஸ்வாலா என்ற இடத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியையும் வீடியோவில் படமாக்கியுள்ளார் ஹெட்லி என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த இடங்கள் குறித்த விரிவான தகவல்களை லஷ்கர் இ தொய்பாவிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொடுத்துள்ளார் ஹெட்லி.
இந்தியா வந்துள்ள எப்.பி.ஐ. அதிகாரிகள் குழு, இந்திய அதிகாரிகளிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் குறிப்பாக மும்பை மற்றும் புனேவில் உள்ள யூத மையங்கள் தவிர இந்திய பாதுகாப்புத்துறை சம்பந்தமான முக்கிய நிலைகள் குறித்த உளவு பார்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது. லஷ்கர் இ தொய்பாவுக்காக இந்த உளவு வேலையில் அவர் ஈடுபட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.
வெளிநாட்டினர் அதிகம் புழங்கும் இடங்களைத்தான் பெருமளவில் வேவு பார்த்துள்ளார் ஹெட்லி.
இதுகுறித்து மத்திய உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பல முக்கிய இடங்களை வேவு பார்த்த ஹெட்லி அவற்றை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்தியா கேட் அருகில் உள்ள ரக்சா பவன் ஆகியவற்றையம் அவர் வேவு பார்த்து தகவல் சேகரித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலுக்கு முன்பு 2008ம் ஆண்டில் ஒருமுறையும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2வது முறையும் என இரண்டு முறை ஹெட்லி புனேவுக்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை அவர் டெல்லியில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவர் புனே சென்றுள்ளார் என்றார்.
புனேவில் தென் பிராந்திய ராணுவ கமாண்ட் தலைமையகம் உள்ளது. மேலும், ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி, இந்திய விமானப்படையின் லோஹேகான் விமானதளம் ஆகியவையும் உள்ளன. லோஹேகான் விமான தளத்தில்தான் இந்தியாவின் அதி நவீன போர் விமானமான சுகோய் 30 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிலைகளுக்கும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications