டெல்லியில் ஸ்டாலின்- புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்தார்

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்ட போது நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில்,
'தமிழக சட்டசபைக்கு புதிய வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதில், பங்கேற்க முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை வழங்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து, ஜனாதிபதி பிரதீபா பட்டீல், துணை ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, சபாநாயகர், துணை சபாநாயகர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி உள்பட தலைவர்களை சந்தித்து தமிழக சட்டசபை வளாக திறப்பு விழா அழைப்பிழை வழங்க உள்ளேன்' என்று கூறினார்.
இன்று காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாலர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, வீரப்ப மொய்லி ஆகியோரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஸ்டாலினுடன் அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் சென்றிருந்தார்.
பிரகாஷ் காரத்துடன் சந்திப்பு...
தனது பயணத்தின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தையும் சந்தித்தார் ஸ்டாலின். அவருடன் டபிள்யூ. ஆர்.வரதராஜன் மரணம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. சந்திப்பின்போது அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.
இதற்கிடையே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், வரும் 13ம் தேதி தமிழக சட்டசபை வளாக புதிய கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைப்பார் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications