ஊழல்: என்எல்சி அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்
சென்னை: நெய்வேலி நிலக்கரி கழக அலுவலகங்களில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஒப்பந்தப்பணிக்காக லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கினார்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பெறுவதில் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.
இந்த போட்டி சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில உயர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை பெற்றுத்தர பண பேரம் பேசுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட என்எல்சி நிறுவனங்களிலும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர் சிபிஐ அதிகாரிகள்.
அப்போது, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நெய்வேலி இல்லத்திலும் போலீசார் கண்காணித்தனர்.
இந்த அலுவலகத்தில் பொது மேலாளராக இருப்பவர் கிருபானந்தன் (50). இவர் மீது அதிகளவு புகார்கள் வந்திருந்தன.
சி.பி.ஐ. சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்எல்சி இல்லம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது காண்டிராக்டர் ஒருவர் பொதுமேலாளர் கிருபானந்தனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்றார். ஏற்கனவே பேசியபடி தனக்கு ஒதுக்கப்பட உள்ள ஒப்பந்த பணிக்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அதை பொது மேலாளர் கிருபானந்தன் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந் திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கிருபானந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கிருபானந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
கிருபானந்தனின் வீடு தி.நகரில் உள்ளது. அவரது வீட்டில் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சொத்து ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications