பெங்களூர் தீ விபத்து - கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் கடந்த செவ்வாய் கிழமை ஒன்பது பேரை பலிவாங்கிய தீவிபத்து சம்பவம் தொடர்பாக கார்ல்டன் டவர் அடுக்குமாடி கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் இந்திரா நகர், பழைய விமான நிலைய சாலையில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் தீ விபத்தை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் முறைப்பட செய்யவில்லை என விசாரணையில் தெரியவந்தது.
சாப்ட்வேர் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக அலுவலகங்கள் இயங்கி வந்த இக்கட்டிடத்தில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடைமுறைகள் செய்யப்படாமல் இருந்தது மிகப்பெரிய குற்றம் என்ற அடிப்படையில் போலீசார் கட்டிட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் தீக்காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை விட, தப்பியோடுவதற்கு வழியில்லாமல் ஜன்னல்கள் வழியாக குதித்து காயமடைந்தவர்களும், இறந்தவர்களுமே அதிகம் என தெரியவந்துள்ளது.
இக்கட்டிடத்தில் உள்ள அவசர வெளியேற்றத்துக்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டும், அறையாக மாற்றப்பட்டும் உள்ளன.
தீவிபத்துக்கு மின் கசிவு அடிப்படை காரணமாக அமைந்தாலும், அதிக உயிர் பலிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதே முக்கிய காரணமாக அமைந்ததாக போலீசார் விசாரணையின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அடுக்குமாடி கட்டிட உரிமையாளர் ரஃபிக்கூர் ரஹ்மான், கட்டிட சங்க செயலாளர் ராமசந்திர பண்டாரி, மின்சார மேற்பார்வையாளர் கெம்பகவுடா, கட்டிட பராமரிப்பாளர் சென்னய்யா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications