காபூல் தாக்குதலில் கொல்லப்பட்ட 6 இந்தியர்களின் உடல்கள் டெல்லி வந்தன
டெல்லி: காபூலில் நடந்த தலிபான் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 6 இந்தியர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் நேற்று மாலை டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.
காபூலில் உள்ள 2 ஹோட்டல்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 6 இந்தியர்கள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். எட்டு இந்தியர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை டெல்லிக்குக் கொண்டு வருவதற்காக இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் காபூல் விரைந்தது.
அந்த விமானத்தில் நேற்று 6 பேரின் உடல்களும் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன. அத்துடன் காயமடைந்த எட்டு இந்தியர்களும் உடன் அழைத்து வரப்பட்டனர்.
விமானம் பாலம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த சமயத்தில், புனேவிலிருந்து டெல்லி திரும்பினார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். அப்போது காபூலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் வரவுள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராஷ்டிரபதி பவனுக்குக் கிளம்பாமல் பத்து நிமிடம் காத்திருந்தார் பிரதீபா. பின்னர் விமானப்படை விமானம் டெல்லி வந்து சேர்ந்ததும், உடல்கள் அடங்கிய சவப் பெட்டிகள் இறக்கப்பட்டன.
அதன் பின்னர் ஆறு பேருக்கும் அஞ்சலி செலுத்தினார் பிரதீபா பாட்டீல். பின்னர் அவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் ராஷ்டிரபதி பவனுக்குக் கிளம்பிச் சென்றார்.
விமானத்தில் கொண்டு வரப்பட்ட ஆறு பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications