பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கின

தேர்வின்போது முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
அறிவியல் புல மாணவர்களுக்கு கடைசித் தேர்வு மார்ச் 19ம் தேதி (தாவரவியல்) முடிகிறது. மார்ச் 22ம் தேதி வணிகவியலுடன் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன.
பிளஸ்டூ தேர்வை இந்த ஆண்டு 7,53,000 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பள்ளிகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரம் பேர்களும், தனித்தேர்வர்களாக 60 ஆயிரம் பேர்களும் எழுதுகிறார்கள். தேர்வுக்காக 1,800 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 11,000 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வுக் கண்காணிப்பாளர்களும் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. பத்து மணி முதல் 15 நிமிடங்களுக்கு கேள்வித்தாளை வாசித்துப் பார்க்க அவகாசம் தரப்பட்டது.
பிளஸ்-2 தேர்வைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுகின்றன.
அதேபோல, சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது.
இதேபோல, 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிகிறது.
பிளஸ் டூ தேர்வு அட்டவணை...
2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.
2 - தமிழ் இரண்டாம் தாள்.
4 - ஆங்கிலம் முதல் தாள்.
5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (ஜெனரல்), புள்ளியியல்.
15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.
19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
22 - வணிகவியல், மனையியல், புவியியல்.
தேர்வு எழுத வந்த மாணவி பலி:
இந் நிலையில் செங்கல்பட்டு செயின்ட் ஜோசப்ஸ் பள்ளியில் பிளஸ் டூ பயின்று வந்த மாணவி சுமையா பானு (17) இன்று காலை தேர்வு எழுத பள்ளிக்கு சைக்கிளில் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாம்பரத்திலிருந்து - திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் சுமையா சம்பவ இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications