சென்னை விமான நிலைய சுங்க அதிகாரி படுகொலை-துணை நடிகைக்கு வலை
சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அவரது வீட்டருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த சாம்சன் (44), விமான நிலைய கார்கோ பிரிவில் கஸ்டம்ஸ் கண்காணிப்பாளராக இருந்தார்.
நேற்றிரவு இவர் தனது மனைவி டெய்சி, மகன்கள் எரிக்சன், ராபின்சன் ஆகியோருடன் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு 11 மணியளவில் காரில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் அருகே காத்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் சாம்சனை அவரது குடும்பத்தார் முன்னிலையிலே சரமாரியாக வெட்டியது.
5 பேர், காரில் இருந்து யாருமே கீழே இறங்காதபடி ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டனர். மற்ற 5 பேரும் சாம்சனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவரது கழுத்து, மார்பு, இடுப்பு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உதவி கோரி கூச்சலிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பயந்து நடுங்கியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே சாம்சன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதில் சாம்சன் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாம்சனின் மனைவி டெய்சியும் சுங்கத்துறையில் தான் பணியாற்றி வருகிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எதிர் வீட்டில் வசிக்கும் பாவ்லினா (47) என்ற பெண் தான் இந்தக் கொலையைத் தூண்டிவிட்டவர் என்று தெரியவந்துள்ளது.
பாவ்லினா ஒரு துணை நடிகையாகயாவார். முன்பு கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் தனது வீட்டு அருகே ஒரு கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலுக்கு ஆடி மாத்தில் விழா நடத்த அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பாவ்லினா பண வசூல் செய்வது வழக்கம். அவருக்கு சாம்சன் வருடந்தோறும் ரூ.5,000 கொடுப்பாராம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சாம்சன் பணம் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து சாம்சனை பார்க்கும் போதெல்லாம் பாவ்லினா மோசமாக திட்டுவாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
2 மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் அப்போதே சாம்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பாவ்லினா.
இதையடுத்து நேற்று இரவு அவர் தான் கூலிப்படையை ஏவி சாம்சனை தீர்த்துக்கட்டியிருக்க வேண்டும் என்று டெய்சி தெரிவித்துள்ளார்.
கொலை நடந்தபோது பாவ்லினாவும், கூலிப்படை கும்பலுடன் நின்று கொண்டிருந்தகாகவும் பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி விட்டதாகவும் அப் பகுதியினர் கூறியுள்ளனர்.
கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பாவ்லினாவையும், கூலிப்படை கும்பலையும் தேடி வருகின்றனர்.
9 பேர் நீதிமன்றத்தில் சரண்:
இந் நிலையி்ல் இந்தக் கொலை தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று 9 பேர் சரணடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications