பெட்ரோல், டீசல் விலை உயர்வு-தமிழகத்தில் 5ம் தேதி ஆட்டோ ஸ்டிரைக்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் சேஷ சயனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்கனவே சாதாரண கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களும், ஆட்டோ தொழிலாளர்களும் விழி பிதுங்கி வாழ்க்கையின் விளிம்பில் நின்று போராடிக் கொண்டிருக்கும் வேலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்றபட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே பல முறை பெட்ரோல், டீசல், ஆயில், கேஸ் விலை ஏற்றப்பட்டு தொழில் நஷ்டத்தில் வாழ்ந்து வருகிற ஆட்டோ தொழிலாளர்களுக்கு, நியாயமான மீட்டர் கட்டணமும் கிடையாது. மானிய விலையில் பெட்ரோல், டீசல் கேஸ், ஆயில் வழங்கவும் மறுக்கிறது.
ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்திடவும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அடிக்கடி ஏற்படுகிற மனக்கசப்பை மாற்றிட தொடர்ந்து முயற்சித்து வருகிற ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் மேலும் மனகசப்பை ஏற்படுத்துகிற விதமான பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்டோ தொழிலை பாதுகாத்திட ஓட்டுநருக்கு மட்டுமே பர்மிட், வங்கிக் கடன், நியாயமான மீட்டர் கட்டணம், ஆட்டோ வாரிய பலன்கள் போன்றவை அரசு செயல்படுத்திடக் கோரி மார்ச் 5ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் 9 மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வர்.
இதில் மத்திய மாநில அரசுகளின் பொய் முகத்தை அம்பலபடுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அதன் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் கருணாநிதியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறு பரிசீலனை செய்யுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வகையில் விடுதலைச்சிறுத்தைகளும் இந்த விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அதனை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 5ம் தேதி சென்னை, அரசு பொது மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications