டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்பட 78 பேர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

பென்னாகரம்: தேர்தல் விதியை மீறி பிரசாரம் செய்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 78 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் இன்பசேகரனும், அதிமுக சார்பில் அன்பழகனும், பா.ம.க. சார்பில் தமிழ்குமரனும், தே.மு.தி.க. சார்பில் காவேரிவர்மனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அமுதா அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் சுமூகமாகவும் அமைதியாகவும் நடக்க அனைத்துக் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(27-ந்தேதி) இரவு பெரும்பாலை அருகே உள்ள ஈச்சம்பள்ளம் என்ற இடத்தில் பா.ம.க.வினர் போலீசார், தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமலும் பிரசாரம், கூட்டம், கொடியேற்று விழா நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

மேலும், இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு பிரசாரம் செய்தனர்.

இது தொடர்பாக எர்ரனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் பெரும்பாலை போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. வேட்பாளர் தமிழ்குமரன் உள்பட 78 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாமக எம்எல்ஏக்களுக்கு கொலை மிரட்டல்!:

இந் நிலையில் பாமக எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு தரக் கோரி காவல்துறை மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை வினியோகிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றன.

இந் நிலையில் பாமக எம்எல்ஏவும் அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவருமான வேல்முருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு கடந்த வாரம் ஒரு புகார் அனுப்பினார்.

அதில், பென்னாகரம் தொகுதியில் ஒரே இரவில் அதிகாரிகள் உதவியுடன் 32,000 குடும்பங்களுக்கு, வேஷ்டி, புடவை, ஜாக்கெட், துண்டு, மற்றும் ரூ. 3,000 வழங்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

மேலும், இதுபோன்ற புகார்களை அனுப்புவதால், என் மீது கோபம் கொண்டவர்கள், என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,

பாமக அளித்த புகாரைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரை விசாரணை அறிக்கை அனுப்புமாறு ஞாயிற்றுக்கிழமையன்று அறிவுறுத்தியிருந்தேன். கலெக்டர் விடுப்பில் சென்றிருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் தான் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதேபோல எஸ்பி சுதாகரும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், பல இடங்களில் வேஷ்டி, சேலைகள் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பியுள்ள அறிக்கையில், மாதேஹல்லி கிராமத்தி திமுக பிரமுகரிடமிருந்து 35 வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வல்லூர், சேக்காடு, ஒண்டிக்கோட்டை கிராமங்களில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட இடத்தில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பென்னாகரத்தில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனுக்கும் அதே அளவில் பாதுகாப்பு தருமாறு போலீசாருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

தேர்தலின்போது மத்திய படை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காவல்துறையினர் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டால் இடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவைப்படாது.

நேர்மையாகவும், நடுநிலையாகவும், நெருக்கடிக்கு பணியாமலும் தேர்தல் பணிகளை போலீசார் மேற்கொள்வதை உள்துறை செயலாளரும், டிஜிபியும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் குப்தா.

புதுச்சேரி பாமக எம்எல்ஏவுக்கும் கொலை மிரட்டல்:

இந் நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி பாமக எம்.எல்.ஏ அனந்தராமன், பொன்னகரத்தில் பாமக வேட்பாளருக்காக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந் நிலையில் அவரது வீட்டுக்கு வந்துள்ள ஒரு கடிதத்தில், ஒரு ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அந்த தபாலில் அனுப்புனர் முகவரியில் எஸ். முருகன் நோணாங்குப்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. வர்மாவிடம் அனந்தராமன் புகார் அளி்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+