பென்னாகரம் இடைத் தேர்தலுக்கு தடையில்லை-நாளை மனு தாக்கல் தொடக்கம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தலை எதிர்த்து மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
பிரபாகரன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தால் பென்னாகரம் தொகுதியில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் சுமார் 8,000 மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. அங்கு தேர்தல் நடத்த மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது. எனவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் கூறுகையில்,
இந்திய அரசியல் சட்டப்படி காலியான தொகுதிகளில் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இங்கு ஏற்கனவே தேர்தல் அறிவித்து பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இனி மே மாதத்துக்கு ஒத்தி வைக்க முடியாது. மே மாதம் தேர்தல் நடத்துவதாக இருந்தால் அடுத்த ஒரு வருடத்துக்குள் பொதுத் தேர்தல் வந்து விடும்.
ஒரு வருட இடைவெளிக்குள் இடைத் தேர்தல் நடத்த கூடாது என்று விதிகள் உள்ளன. எனவே இப்போது விட்டால் மே மாதமும் தேர்தல் நடத்த முடியாது. இதனால் ஒரு வருடம் பென்னாகரம் தொகுதிக்கு பிரதிநிதி இல்லாமல் காலியாகவே இருக்கும் நிலை ஏற்படும்.
எனவே இடைத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது.
தேர்வு நடப்பதால் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆகவே தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அதே நேரத்தில், பொதுத் தேர்வுகளை ஒட்டி தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அருகே 100 மீட்டர் தூரத்தில் தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.
பிரசாரம் செய்பவர்கள் தேர்வு மையம் இருக்கும் பாதைகளில் செல்லக் கூடாது. பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்க கூடாது. இந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர் சரியான முறையில் அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாளை மனு தாக்கல் தொடக்கம்:
இந் நிலையில் இந்தத் தொகுதியி்ல் நாளை மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் 10ம் தேதியாகும்.
11ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 13ம் தேதியாகும்.
4 முனை போட்டி:
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் இன்பசேகரன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், அதிமுக சார்பில் அன்பழகன், தேமுதிக சார்பில் காவேரிவர்மன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் அன்பழகன் 4ம் தேதியும், திமுக வேட்பாளர் இன்பசேகரன் 5ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
திமுக வேட்பாளருக்காக அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் அக் கட்சியினர் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். பாமக வேட்பாளருக்காக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுகவினர் இப்போது தான் பிரச்சாரத்தையே ஆரம்பித்துள்ளனர். தேமுதிக சார்பிலும் பிரசாரம் நடக்கிறது.
இங்கு 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.












Click it and Unblock the Notifications