ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து எங்களை யாரும் பிரிக்க முடியாது-மமதா
கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் காரணமாக எங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து பிரித்து விடலாம் என யாரும் நினைத்தால் அது தவறு என்று கூறியுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் குரல் கொடுத்தது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மம்தா கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், திரிணமூல் இடையே பிளவு என்ற பிரசாரம் எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் திங்கள்கிழமை வங்காள தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின்போது மமதா கூறுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திரிணமூல் தொடர்ந்து நீடிக்கும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இரு கட்சிகளையும் பிளவு படுத்த நினைத்து அது தொடர்பான வதந்திகளைப் பரப்புவோரின் எண்ணம் ஈடேறாது. இத்தகையோர் இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபடக்கூடாது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார் மமதா.












Click it and Unblock the Notifications