பெட்ரோல் விலை உயர்வு-நாடாளுமன்றத்தில் கடும் அமளி
டெல்லி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று எதி்ர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல்- டீசல் மீது வரி உயர்த்தப்பட்டதையடுத்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த திமுக, திரிணமுல் காங்கிரஸ் ஆகியவையும் வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் பட்ஜெட் தாக்கலான பிறகு இன்று நாடாளுமன்றம் 4 நாள் இடைவெளிக்குப் பிறகு கூடியது. காலை மக்களவை கூடியதும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று ஒரே குரலில் பெட்ரோல்-டீசல் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் விலைவாசி உயர்வையும் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சபாநாயகரின் இருக்கைக்கு முன் கூடி அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பத்துக்கு இடையே அவையை சபாநாயகர் மீராகுமார் பிற்பகல் வரை ஒத்தி வைத்தார்.
அதே போல மாநிலங்களவையிலும் இந்தக் கட்சிகளின் எம்பிக்கள் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் அவையை துணை ஜனாதிபதியும் மக்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.
பின்னர் பகல் 2 மணிக்கு மீண்டும் அவைகள் கூடிய பின் விவாதங்கள் தொடங்கின.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சு-பிரணாப்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இந் நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து
காங்கிரஸ் மேலிடம் நேற்று நடத்திய உயர் மட்டக் கூட்டத்தில் டீசல் விலையை மட்டும் கொஞ்சம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாளை இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்டியுள்ளார். அவர்களது கருத்துக்களைக் கேட்ட பி்ன் இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.