தமிழகம்: பிகார் மாணவர்களுக்கு பாதுகாப்பு-நிதிஷ் கோரிக்கை
சிதம்பரம்: தமிழகத்தில் பிகார் மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அம் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட வட இந்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது தப்பியோடி தவறி ஆற்றில் விழுந்து 3 பிகார் மாணவர்கள் பலியானதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம் குமார்(20), கடந்த 28ம் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்தார். அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 500 பேர், நள்ளிரவில் பல்கலைக்கழகத்தை சூறையாடினர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தபோது ஓடிய மாணவர்கள், முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்தனர். இதில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த சுமித் குமார் (22) நீரில் மூழ்கி இறந்தார்.
போலீசார் விரட்டியபோது, வாய்க்காலில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என சக மாணவர்கள் கூறியதால் தீயணைப்புப் படையினர் தண்ணீரில் இறங்கி தேடினர்.
வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் நிறைந்ததிருந்ததால் அவை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இரவு பகலாக அகற்றப்பட்டு தேடுதல் நடந்தது.
அப்போது பிகாரைச் சேர்ந்த முகம்மது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன்குமார் (20) ஆகியோரின் உடல்கள் கிடைத்தன.
இதனால் மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க முதலில் பல்கலைக்கழகத்தின் என்ஜினியரிங் கல்லூரிக்கு மட்டும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் மருத்துவம் தவிர்த்து அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிகார் அரசிடம் துணைவேந்தர் விளக்கம்:
பிகார் மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தது குறித்து, அம்மாநில உள்துறை செயலாளரிடம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு:
இந் நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி:
இதற்கிடையே நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து
இறந்த மாணவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. துரைராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் மாசானமுத்து, ராமசுப்ரமணியன், 5 எஸ்.பிக்கள், 25 டி.எஸ்.பிக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வருக்கு பிகார் முதல்வர் கோரிக்கை:
இந் நிலையில் தமிழகத்தில் பிகார் மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அம் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.