Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சச்சினுக்கு பாரதரத்னா: மத்திய அரசு உரிய நேரத்தில் பரிசீலிக்கும்- காங்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

குவாலியரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார் சச்சின். அதுவரை 194 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்தார் சச்சின்.

இதைத் தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பாராட்டுக்களைக் குவித்தனர். சச்சினுக்கு பாரத ரத்னா விருதும் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், எங்கள் வேலையில் தலையிடக் கூடாது என்று சச்சினை கடுமையாக விமர்சித்த சிவசேனாதான் முதலில் பாரதரத்னா தர வேண்டும் என குரல் கொடுத்தது. தொடர்ந்து பல்துறைப் பிரபலங்களும், சில அரசியல் கட்சிகளும் இந்தக் குரலுக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் தற்போது தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறும்போது, வெகு காலமாக கிரிக்கெட் விளையாடி வரும் டெண்டுல்கரின் ஆட்டத்தை இந்தியா மட்டுமின்றி உலகமே போற்றுகிறது. டெண்டுல்கரின் சாதனை குறித்தான அனைத்து தகவல்களையும் மத்திய அரசு மனதில் கொண்டுள்ளது. பாரத ரத்னா விருதும், பத்ம விருதுகளும் வழங்குவது பற்றி மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்றார்.

சச்சினுக்கு மட்டும் சரியா...?

சச்சின் டெண்டுல்கர் படைத்திருப்பது உலக சாதனை என்பது மறுக்க முடியாத உண்மைதான். இருப்பினும் கிரிக்கெட் உலகில் இது சர்வ சாதாரணமான விஷயம்தான். சாதனைகளை ஒருவர் படைப்பதும், சில காலத்திற்குப் பின்னர் ஒருவர் முறியடிப்பதும் சாதாரண விஷயம்.

அன்வர் படைத்த சாதனையைத்தான் சச்சின் முறியடித்துள்ளார். அதேபோல நாளை இன்னொருவர் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்.

20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார், பல ஆயிரக்கணக்கான ரன்களைக் குவித்துள்ளார் என்று சச்சின் குறித்துப் பெருமைப்பட்டுக் கூறும் அதே நேரம், அத்தனை காலத்திற்கு அவருக்கு தொடர்ந்து - தங்கு தடையின்றி - அவரது சரிவுகளை மனதில் கொள்ளாமல் தரப்பட்ட வாய்ப்புகளால்தான் இத்தனையும் கை கூடி வந்தது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

சச்சின் மிகச் சிறந்த வீரர், இந்த வயதிலும் சிறப்பாக ஆடுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்குப் பாரத ரத்னா தருவதற்கு முன்பு மேலும் சில இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகளையும் அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒலிம்பிக்கில் நம்மால் தங்கம் வாங்க முடியுமா என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரின் கனவாகவே இருந்து வந்தது. அதெல்லாம் நடக்கவே முடியாத ஒன்று என்ற எண்ணமும் நம்மில் நிலைத்திருந்தது. ஆனால் அபினவ் பிந்த்ரா அந்தக் கனவைத் தகர்த்தால் தனது கையிலிருந்த துப்பாக்கியால்.

இதுதான் மிக மிகப் பெரிய சாதனை. முற்றிலும் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான சாதனை. இந்த சாதனையை நிச்சயம் இந்தியாவால் மறக்கவே முடியாது. எனவே பாரதரத்னாவுக்கு மிக மிகப் பொருத்தமானவர் பிந்த்ராவும் கூடத்தான்.

அதேபோல லியாண்டர் பயஸ். இந்திய டென்னிஸ் உலகில் எத்தனையோ பிரபலங்கள் வந்திருந்தாலும் கூட, இந்திய டென்னிஸை இன்று இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் பயஸுக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு.

இந்தியாவிலேயே அதிக அளவிலான கிராண்ட்ஸ்லாம் விருதுகளை குவித்து வைத்திருப்பவர் இவர் மட்டுமே.

அவரும் மகேஷ்பூபதியும் சேர்ந்து இந்திய டென்னிஸின் சிறப்பை உலக அரங்கில் வலுவாகப் பதிவு செய்தவர்கள். இன்று இந்தியாவில் கிரிக்கெட் வெறியையும் தாண்டி டென்னிஸ் மீதான காதல் வலுவாக இருப்பதற்கு இவர்களும் முக்கியக் காரணம்.

எனவே பயஸ்- பூபதியும் கூட பாரதரத்னாவுக்கு மிக மிகப் பொருத்தமானவர்களே.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. நிறையப் பேருக்கு இது தெரிந்திருந்தாலும் இந்த விளையாட்டு இன்று சவலைப் பிள்ளையாக சுணங்கிப் போய்க் கிடக்கிறது - அரசுகளும், மக்களின் பாரமுகத்தால்.

இந்திய ஹாக்கி அணி முன்பு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தது. ஹாக்கி அணி மட்டுமே இந்தியாவுக்கு தங்கத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஹாக்கி அணிக்கு இந்திய அரசு என்ன செய்தது, அதை மேம்படுத்த என்ன செய்தது என்பதற்கு சரியான பதில் இல்லை.

கிரிக்கெட் மட்டுமே மிகப் பெரிய விஷயம், அதில் சாதனை நிகழ்த்தினால் பாரதரத்னா என்ற அளவுக்கு படு வேகமாக சிந்திப்பவர்கள், இப்படி வெளிச்சத்திற்கு வராமல் போன மற்றவர்களையும் மனதில் கொண்டு நியாயமான முறையில் எதையும் முடிவு செய்தால்தான் கொடுக்கப்படும் விருதுக்கும் கெளரவமாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+