டீசல் விலை உயர்வை சமாளிக்க ஆர்டினரி பஸ்களுக்குப் பதில் சொகுசு பஸ்களை அதிகரிக்க திட்டம்
சென்னை: டீசல் விலை உயர்வு சமாளிக்க, பயணிகள் டிக்கெட் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்த தமிழக அரசின் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்து விட்டு அதற்குப் பதில் கூடுதல் கட்டணத்துடன் கூடிய சொகுசு டீலக்ஸ் பஸ்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சென்னையில் மாநகர பஸ் சேவை 50 கிலோ மீட்டர் சுற்றளக்கு 638 வழித்தடங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.தினமும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 3,267 மாநகர பஸ்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 54.50 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தினசரி வருவாய் ரூ. 2.2 கோடியாக அதிகரித்துள்ளது. சாதாரண மற்றும் எல்.எஸ்.எஸ்., தொடர் (வெஸ்டிபுள்), தாழ்தள சொகுசு பஸ்கள், வால்வோ' ஏ.சி. பஸ்கள் என மாநகர பஸ்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 3,267 ஆக அதிகரித்துள்ளது.
சாதாரண பஸ்களில் ஒரு குறைந்தபட்சம் ரூ. 2 முதல் 9.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எல்.எஸ்.எஸ். எனப்படும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் பேருந்துகளில், சாதாரண பஸ் கட்டணத்தை விட 50 பைசா மட்டுமே கூடுதலாக வசூலிக்க வேண்டும். ஆனால், இப்போது முதலாவது ஸ்டேஜுக்கு ரூ. 2.50ல் இருந்து தொடங்கி கடைசி ஸ்டேஜுக்கு ரூ. 11.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எம் சேவை பேருந்துகளில் குறைந்தபட்சமே ரூ. 3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ. 15 வரை உள்ளது.
எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ. 3 தொடங்கி ரூ. 19 வரை வசூலிக்கப்படுகிறது.
சொகுசு பஸ்களில் குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சமாக ரூ. 33ம் வசூலிக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 10 ரூபாய் தொடங்கி 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரையிலான ஏசி பஸ்சுக்குக் கட்டணம் ரூ. 75 ஆகும்.
இதுதவிர இரவு நேர பேருந்துகளில், சாதாரண பேருந்துகளின் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் பயணிகள் கட்டணம் அதிகரிக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதேசமயம், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், சாதாரண பஸ்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு, எம் மற்றும் எல்.எஸ்.எஸ். சேவை பஸ்களை படிப்படியாக சொகுசு பஸ்களாக மாற்றி, அவற்றின் எண்ணிக்கையை 80 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications