டபிள்யூ.ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டாரா - மறுக்கிறது போலீஸ்
சென்னை மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டிருப்பதாக மக்கள் தொலைக்காட்சி பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தக் கூற்றை காவல்துறை மறுத்துள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டபிள்யூ. ஆர்.வரதராஜன் தனது வீட்டிலிருந்து மாயமானார். 2 கடிதங்களை அவர் விட்டுச் சென்றிருந்தார்.
அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது அழுகிப் போன உடலை போரூர் ஏரியிலிருந்து போலீஸார் மீட்டனர்.
இது தனது கணவர்தான் என்று வரதராஜனின் மனைவி சரஸ்வதி உடலை அடையாளம் காட்டினார். இதையடுத்து இறந்தது வரதராஜன்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது. இந்த வழக்கை தற்போது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வரதராஜன் நீரில் மூழ்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொதுவான கருத்து உள்ளது. இந்த நிலையில் நேற்று மக்கள் தொலைக்காட்சி புதிய செய்தி ஒன்றை ஒளிபரப்பியது.
அதில், வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய கழுத்தை கயிற்றாலோ அல்லது ஏதாவது ஒரு பொருளாலோ கடுமையாக இறுக்கி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளதற்கான ஆதாரம் பிரேதப் பரிசோதனையில் கிடைத்துள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக வரதராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்.வரதராஜனுக்குப் பிறகு கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு டபிள்யூ. ஆர்.வரதராஜன் வருவதற்கே வாய்ப்பு இருந்தது.
ஆனால் அவரை அந்தப் பொறுப்புக்கு வர விடாமல் தடுக்க நினைத்த ஒரு பிரிவினர்தான் தொடர்ந்து அவருக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்றும் அந்த செய்தி கூறியது.
இந்தப் புதிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதை போலீஸார் நிராகரித்து விட்டனர். வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும், போலீசார் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.
இருப்பினும் வரதராஜன் குறித்த புதிய செய்தி, அவரது இறப்பின் பின் மறைந்துள்ள மர்மத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications