ரஷ்யாவிடமிருந்து மேலும் பல போர் விமானங்களை வாங்கும் இந்தியா -4 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க் கப்பலை இந்தியாவுக்கு அளிக்கும் இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது. இந்த பழைய கப்பலை புதுப்பிக்கவும், சீரமைக்கவும் இந்தியா கூடுதலாக 2.35 பில்லியன் டாலரை ரஷ்யாவிடம் வழங்கும்.
மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் புடின் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பின் பேரில் புடின் இந்தியா வருகிறார்.
அட்மிரல் கோர்ஷ்கோவை வாங்கும் இந்தியா அந்த போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயர் சூட்டவுள்ளது. 2013ம் ஆண்டு இந்தியாவிடம் இந்த கப்பல் வந்து சேரும்.
கடந்த 2004ம் ஆண்டு 16 மிக்-29கே ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியது. தற்போது கூடுதலாக 29 விமானங்களை வாங்கவுள்ளது.
இந்த போர் விமானம் சமீபத்தில்தான் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக 40 சுகோய்-30 போர் விமானங்களையும் இந்தியா வாங்கத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications