தொடரும் இனவெறித் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள்-ஆஸி, இலங்கைக்கு ஐ.நா கண்டனம்
ஐ.நா.: ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தொடரும் மனித உரிமை மீறல்களும் பெரும் கவலை தருவதாகவும், இவை கண்டனத்துக்குரியவை என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நவி பிள்ளை கூறுகையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்திரேலிய நிர்வாகம், இந்தத் தாக்குதலின் மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
தேசிய அளவிலும், மாகாண அளவிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
விசாரணை மற்றும் தண்டனைகளில் தீவிரம் காட்டப்பட வேண்டும். இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனை தருகிறது என்றார்.
இலங்கை மீது போர்க் குற்ற நடவடிக்கை வேண்டும்..
இலங்கை பிரச்சினை குறித்து நவி பிள்ளை கருத்து தெரிவிக்கையில், போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பெரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சுயேச்சையான விசாரணைக்கு இணங்கவேண்டும். இதற்காக அவர்களுக்கு சர்வதேச நாடுகளும் உதவ முடியும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து வருவது கண்டனத்துக்குரியது, வருத்தத்திற்குரியது என்றார் பிள்ளை.












Click it and Unblock the Notifications