எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம்: சட்ட ரீதியாக சந்திப்பேன் - நித்தியானந்தா

நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ சர்ச்சையில் சிக்கிய பின்னர் நித்தியானந்தாவைக் காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
அவர் சார்பில் சென்னையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக வீடியோ ஒன்றின் மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் நித்தியானந்தா.
அது...
அன்பான பக்தர்களே. சமீப காலமாக எனக்கு எதிராகவும், எனது அமைப்புக்கு எதிராகவும் பல பொய்யான புகார்கள் எழுந்துள்ளதை அறிவீர்கள்.
அதே நேரத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்து இ மெயில்கள் மூலமும், கடிதங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நலம் விரும்பிகள் உலகம் முழுவதுமிருந்து அனுப்பி வருகின்றனர். அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனது போதனைகளால் பலன் பெற்றோர் பலரும் எனக்கு எதிரான புகார்களை நிராகரித்துள்ளனர்.
நான் தற்போது உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நானோ அல்லது எனது அமைப்போ சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எங்களுக்கு சாதகமான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம்.
எனக்கும், எனது அமைப்புக்கும் எதிரான பொய்யான, உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரதத்தை எதிர்கொண்டு முறியடிப்போம்.
விரைவில் உரிய ஆதாரங்களுடன் எனக்கு எதிரான புகார்கள் பொய் என்பதை நிரூபிப்பேன். எனவே அதுவரை அனைவரும் பொறுமையுடன் காத்திருக்குமாறும், அவசரப்பட்டு எந்தத் தீர்ப்புக்கும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். அனைத்து உண்மைகளையும், ஆதாரங்களையும் நான் வெளியிட்ட பின்னர் விரிவாக, கவனமாக ஆராய்ந்து எந்த முடிவுக்கும் வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சிக்கலான இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த, ஆதரவு அளித்து வரும் உலகம் எங்கும் உள்ள எனது பக்தர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
ரஞ்சிதா விவகாரத்தைத் தொடர்ந்து தலைமறைவான நித்தியானந்தா தற்போதுதான் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம், ரஞ்சிதா குறித்த விளக்கத்தை அவர் வெளியிடவில்லை. அதேபோல செக்ஸ் புகார்கள், பக்தை கொலை உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கம் தரவில்லை. விரைவில் அவர் விரிவான விளக்கத்தை அளிப்பார் என்று அவரது தியான பீட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications