பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம்- டாக்டர் ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதா 8-ந் தேதி நாளை (திங்கட்கிழமை) பழைய வடிவத்திலேயே நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த மசோதாவை பழைய வடிவத்திலேயே நிறைவேற்றுவதற்கு கடந்த 13 ஆண்டுகளாக இருந்த தடைகளும், அந்த தடைகளை அகற்றி மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றுவதற்கு தெரிவிக்கப்பட்டு வந்த ஆலோசனைகளும் ஏற்கப்படாமல் மசோதாவை நிறைவேற்ற முற்படுவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனை வரவேற்கிறோம்.
ஆனால் நாட்டில் 80 விழுக்காடு அளவிற்கு உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட பெண்களை அதிகார பங்களிப்பில் புறக்கணித்து விட்டு சமுதாயத்தில் மிகச் சிறுபான்மையாக உள்ள ஆதிக்க சக்திகளுக்கு அதிகார பங்களிக்கும் முயற்சி வேதனை தருகிறது.
பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகார பங்களிப்பை மறுப்பது என்பது அந்த பெரும்பான்மை சமுதாயத்தையே புறக்கணிப்பதற்கு ஒப்பானதாகும்.
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டபோது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதை ஏற்காமல் மகளிர் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றுவது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் கருத்து இதுவாகத்தான் இருக்கும். அதனால்தான் மேல்தட்டு மக்களைப் பற்றியே கவலைப்படும் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியை பின்பற்றி தங்களது உறுப்பினர்களுக்கு கொறடா கட்டளை பிறப்பித்திருக்கின்றது.
கொறடா கட்டளை எதுவும் இல்லாமல் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் மனசாட்சியின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அல்லது மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அனைவரது ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
ஆனால், இனி அதற்கு வழி இல்லை. எனவே சமூக நீதிக்கு தளமாக விளங்கும் தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதாடி, சமூக நீதியை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications