மாஜி அதிமுக எம்.எல்.ஏவின் வாரிசு யார்? - தா.பாண்டியன் சாட்சியம்
மதுரை: மறைந்த மதுரை மேற்குத் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகத்தின் உண்மையான வாரிசு யார் என்ற வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
எஸ்.வி.சண்முகம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவர் ஜெயலட்சுமி என்கிற ஜெயா, 2வது மனைவி பெயர் சரஸ்வதி.
சண்முகம் எம்.எல்.ஏவாக இருந்ததால், சரஸ்வதி ஓய்வூதிய பலனை கேட்டு சட்டசபை கூடுதல் செயலாளரிடம் விண்ணப்பம் கொடுத்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கூடுதல் செயலாளர், சரஸ்வதிக்கு ஒரு தபால் அனுப்பினார்.
அதில், ஏற்கனவே ஜெயலட்சுமி என்ற ஜெயா என்பவர் நான் தான் சண்முகத்தின் மனைவி என்று தெரிவித்துள்ளார். அவர் தனக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க கேட்டுள்ளார். எனவே உண்மையான வாரிசுக்கு மட்டுமே ஓய்வூதியம் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து மதுரை முதன்மை கூடுதல் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சரஸ்வதி. இந்த வழக்கு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணைக்காக தா.பாண்டியன் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவர் கூறுகையில், எஸ்.வி.சண்முகம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த போது அவருக்கும் ஜெயலட்சுமி என்பவருக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள பள்ளக்கத்தில் 1970-ம் ஆண்டு எனது தலைமையில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு பின்பு அவர் கட்சியில் இருந்து விலகி விட்டார். இதனால் அவரைப் பற்றி என்னால் தெரிந்து கொள்ள இயலவில்லை என்றார்.
தா.பாண்டியனின் சாட்சியத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications