பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐஐடி அந்தஸ்து - சிபல்
வாரணாசி: வாரணாசியில் உள்ள புகழ் பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு ஐஐடி அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புக்காக வாரணாசி வந்த கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐ.ஐ.டி. அந்தஸ்து தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.
நாட்டில் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் மாணவர்களில் 12.4 சதவீதம் பேர் மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடர்கின்றனர். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித்துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்ய விதிமுறை ஒன்றை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள குறைபாடுகள் களையப்படும்.
உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் அறிவும், திறமையும் உள்ளவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதனை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்திய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க உறுதி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications