இந்தியத் தூதரகத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் எம்.எப்.ஹூசேன்
துபாய்: இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமான பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன்.
இந்துப் பெண் கடவுகள்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் ஹூசேன். இதையடுத்து அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ஹூசேன்.
சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமையை கைவிட தீர்மானித்தார் ஹூசேன். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டார் ஹூசேன்.
95 வயதாகும் ஹூசேன், இந்திய ஓவியப் பிரியர்களால் இந்தியாவின் பிகாசோ என அழைக்கப்பட்டவர். நேற்று டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஹூசேன், தனது பாஸ்போர்ட்டை அங்கு ஒப்படைத்தார்.
இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டப்படி ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதி கிடையாது. எனவே ஹூசேன் தனது இந்தியக் குடியுரிமையை விட்டுக் கொடுத்து விட்டார். இதன் மூலம் இனி அவர் கத்தார் குடிமகனாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications