நெல்லை பல்கலை-யோகா மாணவர்களுக்கு கட்டண சலுகை
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு யோகா பாடத்தில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என துணை வேந்தர் சபாபதி மோகன் தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் யோகா மற்றும் இயற்கையியல் ஆகிய புதிய பாடபிரிவுகள் துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு துணைவேந்தர் சபாபதி மோகன் தலைமை வகித்து யோகா மற்றும் இயற்கையியல் பிரிவில் பட்ட, பட்டய படிப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது,
நெல்லை பல்கலைகழகத்தில் யோகா மற்றும் இயற்கையியல் பாடம் இந்த கல்வியாண்டு முதல் தொலைதூர கல்வியில் தொடங்கப்படுகிறது.
இப்படிப்பு பிஎஸ்சி, எம்எஸ்சி டிப்ளமோ என மூன்று நிலைகளில் தொலைநெறி தொடர்கல்வி துறை மூலம் கற்றுத்தரப்பட உள்ளது.
யோகா படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யோகா மற்றும் இயற்கையியல் படிப்பு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாணவர்களின் மனதை ஓருமுகப்படுத்தும்.
பல்கலையில் பிற துறை மாணவர்களுக்கு யோகா படிப்பில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இதனால் பிறதுறையை சேர்ந்த மாணவர்கள் யோகா படிப்பில் சேர்ந்து பயன்பெற வேண்டும். வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பல்கலை மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும். இதற்காக யோகா மற்றும் இயற்கையியல் பாடத்திட்டங்கள் பல்கலை கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications