சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை
ராமேஸ்வரம்: சென்னையில் நடைபெறும் புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதால், அவரது பாதுகாப்பை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்னைக்கு வருகிறார்கள்.
இதற்காக 3 நாட்கள் வெளியில் நடமாட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதித்து விட்டனர்.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறு விடாமல் தடுக்கும் வகையில் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர்.
ஒரு மணி நேர சோனியாவின் சென்னை வருகையையொட்டி வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை முதல் ராமேஸ்வரம் வரை பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடற்படை, கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விழா நடைபெறும் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கக் கூட தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால் மீனவர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் நடைபெறும் விழாவுக்கு ராமேஸ்வரத்தில் தடை விதித்தால் எப்படி, ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் தொழில் பாதிக்கப்பட்டு பெரும் வேதனையில் உள்ளோம். இந்த நிலையில் இப்படியெல்லாம் தடை விதித்தால் எப்படி என்று அவர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications