பைக்கில் சென்ற ஐஎன்டியுசி தலைவருக்கு சராமரி வெட்டு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று காலை பைக்கில் சென்ற ஐஎன்டியுசி தலைவருக்கு சராமரி அரிவாள் வெட்டு விழுந்தது.
கோவில்பட்டி பெரியசாமி நகர் புதுக்கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர். லட்சுமி மில்லில் வேலை செய்து வருகிறார். அங்கு ஐஎன்டியுசி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.
வடக்கு புதுக்கிராமம் 3வது தெருவை சேர்ந்தவர் ரமணி. இவர் லட்சுமி மில்லில் எதிர் புறம் சாலுன் கடை வைத்துள்ளார். இதனால் அவ்வப்போது ராஜசேகர் மில்லுக்கு செல்லும்போது அவருடன் பைக்கில் செல்வது வழக்கம்.
இதுபோல் இன்று காலை 7 மணிக்கு ராஜசேகர் பைக்கில் புறப்பட்டார். அவருடன் ரமணியும் வந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பைக்கை ஒருவர் மறித்தார்.
அவர் கையில் அரிவாள் மற்றும் கம்பி வைத்திருந்தார். இதை கண்ட ராஜசேகர் பைக்கை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். பின்னால் இருந்த ரமணி அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் அந்த நபர் ராஜசேகரை விரட்டி சென்று சாரமரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜசேகர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications