ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில், மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்.
புகழ் பெற்ற லால் செளக் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
லால் செளக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் வந்தனர். வந்த வேகத்தில் பாதுகாப்புப் படையினரை மிக நெருக்கத்தில் வைத்து அவர்கள் சரமாரியாக சுட்டனர்.
இதில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு வீரர் காயமடைந்தார். பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிப் போய் விட்டனர்.
பிஸ்டல்கள், ரிவால்வர்களுடன் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். கூடுதல் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோகர் பஜார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.