சரத் பவார் குறித்துக் கிண்டல் பேச்சு - காங். செய்தித் தொடர்பாளர் பதவி பறிப்பு
டெல்லி: மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவாரை, விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக நக்கலாக விமர்சித்துப் பேசியதற்காக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சத்யவிராத் சதுர்வேதியிடமிருந்து அப்பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்துள்ளது.
சதுர்வேதி இது போல எடக்கு மடக்காகப் பேசுவது முதல் முறையல்ல. முன்பு பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு சமாஜ்வாடிக் கட்சியின் ஆதரவு மிக மிக அவசியம் என்ற நிலையில் காங்கிரஸ் இருந்தபோது, தடாலடியாக அமர்சிங் (அப்போது அவர் சமாஜ்வாடி பொதுச் செயலாளராக இருந்தார்) குறித்து ஏடாகூடமாக பேசி காங்கிரஸ் மேலிடத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் சதுர்வேதி.
இந்த நிலையில் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக சரத்பவாரை விமர்சித்துப் பேசியிருந்தார் சதுர்வேதி. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியிடம் புகார் செய்தது பவாரின் தேசியவாத காங்கிரஸ்.
இதையடுத்து சதுர்வேதியிடமிருந்து செய்தித் தொடர்பாளர் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மீடியா துறை தலைவர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், சதுர்வேதி கட்சி செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார்.