ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு ரூ. 200 கோடி வரி வருவாய்
டெல்லி: தொட்டால் பொன் என்பது ஐபிஎல்லுக்கு மிகச் சரியாக பொருந்தும். இவர்கள் தொட்டதெல்லாம் பணம் என்பது ஒரு புறம் இருக்க இவர்களால் மத்திய அரசுக்கு ரூ. 200 கோடி அளவுக்கு வரிகள் மூலம் வருவாயாக கிடைக்குமாம்.
இந்தக் கணக்கை அரசு வெளியிடவில்லை. மாறாக வரி நிபுணர்கள் இதைக் கணித்துச் சொல்லியுள்ளனர்.
3வது ஐபிஎல் தொடர் போட்டிகளின் போது, வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், வர்னணையாளர்கள் ஆகியோரின் சம்பளத்தின் மூலம் அரசுக்கு ரூ. 100 கோடி அளவுக்கு வருமான வரி கிடைக்குமாம்.
மேலும் ரூ 100 கோடி வருமானம், விளம்பரங்கள், மார்க்கெட்டிங், ஆலோசனை சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்குமாம். அதாவது இது மறைமுக வரி (சேவை வரி).
ஒரு நிகழ்ச்சியை வணிக நோக்கில் நடத்தினால் அதற்கு சேவை வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டி முழுக்க முழுக்க வர்த்தக நோக்கில்தான் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த பிப்ரவரி 22ம் தேதி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான வரி நிவாரண நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது. இதன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகள் மூலம் அரசுக்கு ரூ. 200 கோடி வரை வருமானம் வந்து சேருகிறது.
ஆனால் தன்னை ஒரு சேரிட்டி நிறுவனம் என்று வாய் கூசாமல் கூறி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது நினைவு கூறத்தக்கது.
கடந்த 2007-08ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈட்டிய வருமானம் ரூ. 1000 கோடியாகும்.
தற்போது உள்ள ஐபிஎல் அணிகள் பெரும்பாலானவற்றின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் மிகப் பெரும் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது அத்தனை இந்தியர்களுக்கும் உண்மையிலேயே மிகப் பெருமையான விஷயம்தான்.